Wednesday, March 24, 2010

94-கண்ணன் தருமருக்கு உரைத்தல்

இப்போது கண்ணன் தருமரை நோக்கி..'நீ கவலைப்படுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.மனதைக் கொன்றழிக்கும் கவலையிலிருந்து மீள்வாயாக.போர்க்களத்தில் மாண்டவர் அனைவரும் வீரப்போர் புரிந்து மாண்டவரே! யாரும் கோழைகளாக புறமுதுகு காட்டி ஓடுகையில் கொல்லப் படவில்லை.அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு சுவர்க்கம் சென்றனர்.அவர்களைக் குறித்து நீ புலம்புவதில் நியாயம் இல்லை.

புத்திரனை இழந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட சிருஞ்சிய மன்னனுக்கு நாரதர் சொன்ன ஒரு வரலாற்றை உனக்கு நான் சொல்கிறேன்.சிருஞ்சியனை நோக்கி நாரதர் 'வேந்தே...இறந்து போன மாமன்னர்களின் வரலாற்றைக் கேட்டபின் உனது துன்பம் தொலையும் என எண்ணுகிறேன்.முன்னொரு காலத்தில் மருத்தன் என்னும் மன்னன் ஒருவன் இருந்தான்..இந்திரன்,வருணன்,பிரகஸ்பதி முதலானோர் வந்து சிறப்புச் செய்யும் அளவிற்கு யாகம் செய்த பெருமை மிக்கவன் அவன்.அம்மருத்தனது ஆட்சியில் வித்தின்றியே விளைவு மிகுந்திருந்தது.உழவு முதலியன இன்றியே தானியங்கள் எங்கும் குவிந்து கிடந்தன.தேவர்களுக்கும்..கந்தர்வர்களுக்கும் அவன் அளித்த அளவிற்கு வேறு யாரும் தானம் அளித்ததில்லை.உன்னையும், உன் மகனையும் விட அம்மருத்தன் ஞானம்,தருமம்,செல்வம்,வைராக்கியம் ஆகிய நான்கினும் சிறந்து விளங்கினான்.அத்தகையவனே இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்து போனது குறித்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?

சுகோத்திரன் என்னும் மன்னனும் இறந்து விட்டான்..அவன் என்ன சாதாரண மன்னனா? அவனது மேன்மையை அறிந்த இந்திரன் அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருடம் பொன் மாரி பெய்வித்தான்.ஆறுகளில் பொன்னீர் ஓடிற்று.அவற்றில் மீன்,நண்டு,ஆமை கூட பொன்னிறமாய்க் காட்சி அளித்தது.பல யாகங்களில் பொன்னையும், பொருளையும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.அத்தகைய மன்னனும் மாண்டு விட்டான் எனில்..ஒரு யாகமும் செய்யா உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிராய்.

அங்க தேசத்து அரசன் பிரகத்ரதன்..அவன் செய்த யாகத்தின் போது லட்சக்கணக்கான யானைகளையும்,குதிரைகளையும்,பசுக்களையும்,காளைகளையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.அளவற்ற செல்வங்களை வாரி வாரி வழங்கினான்.கொடை வள்ளலான அந்த பிரகத்ரதனும் இறந்து போனான்

சிபி என்னும் அரசன் உலகம் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன்.அவன் தன் நாட்டில் உள்ள பசுக்களை மட்டுமின்றி..காட்டில் உள்ள பசுக்களையும் யாகத்தின் போது தானம் செய்து உயர்ந்திருந்தான்.பிரம தேவரே அவனது பெருமையைக் கண்டு பெருமிதம் அடைந்தார்.அத்தகைய பெருமை மிக்கவனும் இறந்து விட்டான்.

செல்வங்களைக் குவியல்..குவியலாய் பெற்றவன் பரதன் என்னும் மன்னன்.ஆயிரம் அசுவமேத யாகங்களையும்..நூறு ராஜசூய யாகங்களையும் செய்த பெருமை மிக்கவன்.அந்த பரதன் செய்த செயற்கரிய செயல்களை தம்மால் செய்ய முடியவில்லையே என அக்கால மன்னர் எல்லாம் ஏங்கினர்.யாகத்தின் போது அம்மாமன்னன் கோடிக்கணக்கான பசுக்களை தானம் செய்தான்.உன்னையும்..உன் மகனையும் விட சிறந்தவன் இறந்து விட்டான்.

ராமரைவிட சிறந்தவரை காணமுடியுமா?உலக உயிர்களில் அவர் காட்டிய அன்பிற்கு ஈடு உண்டா..அந்தப் புண்ணியரின் ஆட்சியில் மக்கள் நோய்த் துன்பமின்றி வாழ்ந்தனர். மாதம் மும்மாரி பெய்தது.மக்கள் பயமின்றி மகிழ்வுடன் வாழ்ந்தனர்.பதினாங்கு ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு பல அசுவமேத யாகங்களைச் செய்தார்.அயோத்தியில் ராம ராஜ்யம் நீடித்திருந்தது,..அந்த ராமனும் மரணமடைந்தான்.

பகீரதன் பற்றி அறியாதார் இல்லை..அவன் ஆயிரம்..ஆயிரம் குதிரைகளையும்,யானைகளையும்,தேர்களையும்,பசுக்களையும்,ஆடுகளையும் தானம் செய்தவன்.அவன் மடியில் கங்கை ஒரு குழந்தைப் போல அமர்ந்திருந்தாள்.அதனால் கங்கை அவனுக்கு மகளானாள்...உம்மையும்..உம் மகனையும் விட சிறந்த அந்த பகீரதனும் மரணம் அடைந்தான்..

(கண்ணன் மேலும் கூறுவது தொடரும்)

Friday, March 19, 2010

93- உண்ணா நோன்பு இருப்பேன் எனல்

வியாசரின் எந்த விளக்கமும் தருமரின் மனதை மாற்றவில்லை.பலரும் மாறி..மாறி கூறியும் பயன் இல்லை.அவர் வைராக்கியத்துடன் தன் நிலைமையை எடுத்துரைத்தார்.

'போரில் நாட்டாசை காரணமாகச் சகோதரர்களைக் கொன்றேன்..யாரின் மடி மீதிருந்து உற்சாகமாக விளையாடினேனோ அந்த பீஷ்மரை யுத்த களத்தில் இழந்தேன்.அந்தப் பிதாமகர் ரத்த வெள்ளத்தில் மலை போல் சாய்ந்த போதே பாவியாகிய நான் சோகத்தின் மடியில் வீழ்ந்தேன்..பரசுராமருடன் பல நாள் போர் புரிந்த வீரராகிய அந்தப் பீஷ்மர் யுத்த களத்தில் என்னால் வீழ்த்தப்பட்டார்.இளமைப் பருவம் தொடங்கி வளர்த்து எங்களையெல்லாம் ஆளாக்கிய அந்த உத்தமரைக் கேவலம் பேராசை காரணமாக இந்த நிலைக்கு ஆளாக்கினேன்.

ஒரு பொய்யைச் சொல்லி துரோணரைச் சாகடித்தேன்.இதைவிட வேறென்ன பாவம் இருக்க முடியும்? சத்தியம் தவறாதவன் என்ற பெயர் எனக்கு எப்படி பொருந்தும்? பொய்யனாகிய நான் இந்தப் பூமண்டலத்தை ஆண்டு பெறப்போவது என்ன?

புறங் கொடாப் போர் வீரனான் என் தமையனைக் கொன்றேனே..இதைவிட வேறு எது பாவம்?

ஒரு சிங்கக் குட்டியென வலம் வந்த அபிமன்யூவைத் துரோணரின் சக்கர வியூகத்தில் தள்ளிக் கொலை செய்தேனே..பாவியல்லவா நான்? இனி உலகில் அத்தகைய வீரன் பிறப்பானா? என் பொருட்டு திரௌபதியின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப் பட்டனரே..திருஷ்டத்துய்மனும்..விராடனும்..எண்ணற்ற வீரர்களும் என்னால் அல்லவா மாண்டார்கள்?

இவர்கள் அனைவரையும் இழந்த பிறகு நான் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்? நான் உண்ணா நோன்புடன் உயிர் துறக்கத் தயாராகி விட்டேன்..அனுமதி கொடுங்கள்' என மனம் நொந்து வியாசர் முதலான மகரிஷிகளிடம் கேட்டுக் கொண்டார் தருமர்.

Tuesday, March 16, 2010

92-வியாசர் ராஜநீதி பற்றி கூறல்

'தருமா...தம்பியர் பன்னிரெண்டு ஆண்டுகள் கானகத்தில் இருந்த போது என்னென்ன கனவுகள் கண்டனரோ,..அந்தக் கனவுகள் நிறைவேற நீ உதவ வேண்டும்.அவர்கள் காட்டில் பட்ட துன்பத்தின் முடிவு காலமான தற்போது இன்பம் அடைய வேண்டாமா..நீயும்,உன் தம்பியரும் அறம்,பொருள் இன்பங்களை நல்வழியில் அனுபவித்த பிறகு நீ காட்டை நோக்கிச் சென்று தவம் புரியலாம்.போர்க்களத்தில் பெற்ற வெற்றியின் பயனை நீ அலட்சியம் செய்யாதே..ராஜநீதி தெரிந்தவர்கள் இந்த வெற்றியை ஒழுங்குபடுத்தி நாட்டை நன்முறையில் பரிபாலிக்க வேண்டாமா?அரச நீதியை நன்கு உணர்ந்து இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்பக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்..இதில் பாபம் ஏதும் இல்லை..குடிமக்களிடம் ஆறில் ஒரு பங்கு வசூலித்து..நாட்டை நன்கு ஆளவில்லையெனின்..அந்த அரசனுக்கு குடிமக்களின் பாபத்தில் நாலில் ஒரு பங்கு வந்து சேரும்.

யுதிஷ்டிரா..அரச நீதி பற்றி மேலும் சொல்கிறேன்..தரும நூல் படி தண்டனை வழங்க வேண்டும்.இதில் தயக்கம் கூடாது.சினத்தை விலக்க வேண்டும்.குடிமக்களிடம் அன்பு காட்டித் தந்தை போல் நடந்துக் கொள்ள வேண்டும்.அரசரின் முயற்சி விதி வசத்தால் பழுது பட்டாலும் உலகம் அவ்வரசனை குறை கூறாது.நாடாளும் மன்னன் பகைவரை ஒடுக்குவதில் விழிப்பாக இருக்க வேண்டும்.அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளாகும் நாட்டின் அரசன் எந்த ஒரு நல்ல செயலையும் நிறைவாக செய்ய முடியாது.ஆகவே பகை சிறிது என்று எண்ணக்கூடாது.அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கல்வியிற் சிறந்த சான்றோர்களையும்..போர் வீரர்களையும் கண்ணெனப் போற்ற வேண்டும்..நாட்டின் மேன்மைக்கு வணிகரும் காரணமாவர்.ஆதலால் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மன்னன் திகழ வேண்டும்.உயர் அதிகாரிகளின் தகுதி அறிந்து தக்க காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்..தனக்கு ஆலோசனை கூறத் தக்க அறிவார்ந்த குழுவை அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டும்..தரும சாத்திரத்திலும்..நீதி சாத்திரத்திலும் தேர்ச்சி உள்ளவர்கள் எடுக்கும் முடிவு மூவுலகிலும் பாராட்டப் படும்.அறிவின் எல்லையைக் கண்டவராயினும் ஒருவரையே நம்பியிருக்கக் கூடாது.

தருமா...அடக்கம் இல்லாமல் ஆணவத்துடன் நடக்கும் அரசனை மக்கள் பழிப்பர்.அத்தகைய மன்னனிடம் பாவமும் வந்து சேரும்.நன்றாக ஆராய்ந்து வழங்கும் தண்ட நீதியால் பாவம் ஏதுமில்லை.எவ்வளவுதான் முயன்றாலும் சில விஷயங்கள் விதி வசத்தால் பயனற்றவனாக முடிவதுண்டு.அதனால் மன்னனைப் பழிக்க மாட்டார்கள் மக்கள்.இத்தகைய நற்பண்புகளுடன் கூடிய அரசனை வரலாறு பாராட்டும்.ஆகவே..யுதிஷ்டிரா..அரசாட்சியை மேற்கொண்டு புகழுடன் பொலிக' என்றார் வியாசர்.

Thursday, March 11, 2010

91-வியாசர் அறிவுரை

அசைக்க முடியாத தருமரின் மனதை மாற்ற வியாசர் கூறுகிறார்..

'தருமா..இல்லற தருமமே சிறந்த தருமமாகும் என சாத்திரங்கள் கூறுகின்றன.சாத்திரப்படி நீ நடந்துக் கொள்ள வேண்டும்.இல்லறம் துறந்து காடு செல்ல உனக்குச் சாத்திர அனுமதியில்லை.தேவரும்,விருந்தினரும்,மற்றவரும் இல்லறத்தாரையே சார்ந்திருக்கின்றனர்.அவர்களைக் காப்பது உன் கடமையாகும்.விலங்குகளும்,பறவைகளும் கூட இல்லறத்தாராலேயே காப்பாற்றப்படுகின்றன.உனக்கு நான்கு வருண தருமமும் தெரியும்.க்ஷத்திரிய தருமத்தை நீ நன்கு உணர்ந்திருந்தாலும் உனக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.முயற்சியும்,தானமும்,யாகமும் மக்களைப் பாதுகாப்பதும்,நடு நிலைமையோடு நடந்து கொள்வதும். பகயை அழிப்பதும் அரசருக்கான கடமையாகும்.செங்கோன்மைதான் அரசருக்கு உரிய மிக உயர்ந்த தருமமாகும்.அரசன் குற்றவாளிகளை தண்டித்து நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும்.இதுவும் அரச தருமம் என்பதை புரிந்து கொள்.சுத்யும்னன் என்னும் ராஜரிஷி ஒழுங்காக செங்கோல் செலுத்தியதால் முக்தியடைந்தார் என்பதைத் தெரிந்து கொள்' என்றார்.தருமர் சுத்யும்னன் எப்படி முக்தியடைந்தார் என வியாசரைக் கேட்டார்.

வியாசர் சொல்லத் தொடங்கினார்...முன்னொரு காலத்தில் சங்கர்,லிகிதர் என இரு சகோதரர்கள் இருந்தனர்.இருவரும் தவத்தில் சிறந்தவர்கள்.அவர்களுக்கு பாகுதை என்னும் நதிக்கரையில் மரங்களால் சூழப்பட்ட ஆசிரமங்கள் தனித் தனியாக இருந்தன.ஒரு சமயல் லிகிதர் சங்கரின் ஆசிரமத்திற்கு வந்தார். சங்கர் அப்போது வெளியே சென்றிருந்தார்.லிகிதர் மரத்தில் நன்கு பழுத்திருந்த கனிகள் சிலவற்றை பறித்து உண்ணத் தொடங்கினார்.திரும்பி வந்த சங்கர் தம்பியின் செயல் கண்டு கோபமுற்றார்.'என் அனுமதியின்றி பழங்களைப் பறித்தது திருட்டுக் குற்றம்.இக் குற்றத்திற்கான தண்டனையை இந்நாட்டு மன்னனிடம் பெற்று அத் தண்டனையை அனுபவிப்பாயாக' என்றார்.

அதன்படி லிகிதர் மன்னன் சுத்யும்னனிடம் சென்று தண்டனை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.அதைக் கேட்ட மன்னன் 'தண்டனை வழங்குவது அரச நீதிதான்..என்றாலும் மன்னிப்பு வழங்குவதும் அரச தருமம்..ஆதலால் உம்மை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்..நீர் போகலாம்' என்றார்.ஆனால் லிகிதர் தாம் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.அதனால்..திருட்டுக் குற்றத்திற்காக அவரது கைகள் துண்டிக்கப் பட்டன.

அறுபட்ட கைகளுடன் சங்கரைக் கண்ட லிகிதர்..'அரச நீதி கிடைத்து விட்டது..தாங்களும் சினம் தணிந்து என்னை மன்னிக்கவும்' என்றார்.

அதற்கு சங்கர் 'எனக்கு உன் மீது சினம் இல்லை.ஆனால் குற்றத்திற்கான தண்டனையை யாரானாலும் அனுபவித்தேத் தீர வேண்டும்.குற்றத்திற்கேற்ற தண்டனை விதித்தல் மன்னன் கடமையாகும்.அதுவே அரச நீதியாம்.இனி உன் பாவம் விலகும்.நீ பாகுதி நதிக் கரையில் தியானம் செய்வாயாக' என்றார்.

அவ்வாறே..லிகிதர் தியானம் இருக்க..தியான முடிவில் கைகள் தாமரை மலர்கள் போல் தோன்றின.அவர் தம் சகோதரரிடம் சென்று விவரத்தைச் சொன்னார்.உடன் சங்கர் 'இது என் தவ வலிமையால் நடந்தது.' என்றார்.

அவ்வாறாயின் இதை நீங்கள் முன்னமேயே செய்திருக்கலாமே என்றார் லிகிதர்.

'உண்மை..இதை என்னால் முன்னரே செய்திருக்க முடியும்..ஆனாலும் தண்டனை வழங்கும் தகுதி அரசனுக்கே உண்டு.உனக்கு தண்டனை வழங்கியதால் அரசன் தூயவனாக ஆகி..இறுதியில் முக்தியடைந்தான்.குற்றத்திற்கான தண்டனை அனுபவித்ததால் உன் பாவமும் கழிந்தது' என்றார் சங்கர்.

இக்கதையை எடுத்துரைத்த வியாசர் 'தருமா..நீயும் அரசாட்சியை ஏற்றுச் செங்கோல் செலுத்தி நற்கதி அடைவாயாக' என்றார்.

Tuesday, March 9, 2010

90-துறந்தார் பெருமை

அர்ச்சுனனின் சொல் கேட்ட தருமர்..அவனுக்கு தன் வைராக்கியத்தை புலப்படுத்தச் சொல்கிறார்..

'தம்பி..பல கோணங்களில் பார்க்கையில்..சாத்திரங்கள் முரண்பட்டதாய் தோன்றும்.ஆயினும் துறவறத்தின் மேன்மையை..உண்மைத் தன்மையை நான் அறிவேன்..நீ சாத்திரத்தை மேற்போக்காக படித்தவன்.அதனை ஆழ்ந்து நோக்காதவன்.உண்மையான சாத்திர ஞானம் உள்ளவன் உன்னைப் போல பேச மாட்டான்.உடன்பிறப்பே..இந்த அளவாவது..நீ சாத்திரத்தை அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி.நீ ஒரு போர் வீரன்.உனக்கு இணையாக போர் புரிபவன்..உலகில் யாரும் இல்லை.போர்க் கருவிகளை உன்னைப் போல யாரால் அவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்த முடியும்?உனக்கு இணையானவன் மூவுலகிலும் இல்லை.அதற்காக நான் பெருமிதம் அடைகிறேன்.ஆயினும் தம்பி, நீ சாத்திரம் பற்றிப் பேசாதே..

செல்வம் பெரிது என்கிறாய்..அதிலும் மண்ணாள் செல்வம் யாருக்கு வாய்க்கும் என்கிறாய்.செல்வம் நிலையற்றது.இதனை உணர்ந்து தவம் மேற்கொள்பவர் நிலையான முக்தி இன்பம் அடைவர்.எல்லாவற்றையும் தியாகம் செய்பவன் எவனோ..அவனே நற்கதி அடைகிறான்.

தியாகம் என்பது நம்மிடம் உள்ள பொருட்களைப் பிறருக்கு தருவது மட்டும் அன்று.உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்கள் அனைத்தும் விட்டு விடுவதும் தியாகம் தான்.நற் பண்புகளை எடுத்து உரைக்கும் ஆகமங்களைக் கற்பவர் இந்த உணமையை அறிவர்.

கண்களால் காணமுடியாததும்..வார்த்தைகளால் வருணிக்க முடியாததும் ஆன ஆன்மா தான் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு பிறவிகளில் உழன்று வருகிறது.அஞ்ஞானத்தால் ஏற்படும்..இந்த கர்ம வினைகளை நல்ல ஞானத்தால் அழித்து விட்டு மோட்ச மார்க்கத்தில் செல்ல வேண்டும்.தம்பி, துறவிகளால் போற்றப் பட்ட இம் முக்திப் பாதையை விட்டு..பல துன்பங்களுக்குக் காரணமான செல்வத்தை நீ ஏன் விரும்புகிறாய்? வினையின் கொடுமையை நன்கு உணர்ந்த ஆகம அறிவு மிக்கவர்..பொருளைப் பெரிதென ஒரு நாளும் பாராட்ட மாட்டார்கள்.தருமம் தெரிந்தவர்களோ..வைராக்கிய சிந்தை உடையவர்களாகிப் பொருள் மீதுள்ள பற்றை அறவே விலக்கிப் பரமபதத்தை அடைகின்றனர்.ஆகவே, அர்ச்சுனா..இது குறித்து நீ அதிகம் பேச வேண்டாம்' என்று கூறி..தருமர் தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

Monday, March 1, 2010

89-ஜனகர் பற்றி அர்ச்சுனன்

தருமரின் வைராக்கியம் பற்றி அறிந்த அர்ச்சுனன் வருத்தத்துடன் தருமரைப் பார்த்து...

நாட்டை விட்டு நீங்கி பிச்சை ஏற்கத் துணிந்த ஜனகரைப் பற்றி ஆவர் மனைவி கூறியதை உலகு அறியும்.பொன்னையும், பொருளையும், மனைவி மக்களையும், நண்பரையும் பிரிந்து ஒன்றும் இல்லாதவராய்ப் பிச்சைத் தொழிலை மேற்கொண்டவராய்த் திரிந்த ஜனக மாமன்னரை அவர் மனைவி யாரும் இல்லாத போது நெருங்கி பேசினாள்..

'மாபெரும் அரசைத் துறந்து..ஓடெடுத்து ஒரு பிடி அரிசி எப்போது கிடைக்கும் என ஏன் எதிர்ப்பார்க்கிறீர்? ஆயிரமாயிரம் விருந்தினரை உபசரித்த நீர் ஏன் இப்படி வயிறு வளர்க்க பிச்சை எடுக்கிறீர்..உம் தாய் இப்போது மகனை இழந்து காணப்படுகிறாள்.பெற்ற தாயையும்..உற்ற தாரத்தையும் தவிக்க விட்டு இப்படிச் செல்வது முறையா? அரசர் பலர் உம்மை சுற்றிச் சுற்றிப் போற்றி வழிபட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்களே, அவர்களை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீர் எந்த உலகை அடையப் போகிறீர்..

நாட்டையே சோகக்கடலில் தள்ளிவிட்டுச் செல்லத் துணிந்த உமக்கு..நிச்சயமாக முக்தி கிடைக்காது..உண்மையிலேயே நீர் சினத்தை விட்டு விட்டீரா? துறவுக் கோலத்தின் சின்னமாக விளங்கும் இந்தத் தண்டத்தையும்..காஷாயத்தையும் ஒருவன் பிடுங்கினால் உமக்கு சினம் வராதா? யாவற்ரையும் விட்டுத் தொலைத்த உமக்கு ஒரு பிடி அரிசியின் மீது மட்டும் ஆசையில்லையா?

ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்..துறவிகளுக்கு உணவளிக்கும் இல்லற வாழ்வே மேலானது.அதுதான் உலகில் நிலையானது.உணவு அளிக்கும் அரசன் இல்லாவிடின் மோட்சத்தை விரும்பும் துறவிகளும் தங்கள் துறவு வாழ்க்கையில் நிலை குலைந்து போவர்.துறவறம் சிறப்படைவதே இல்லறத்தால் தான்.உயிரானது உணவால் நிலை பெற்றுள்ளது.ஆகவே உணவு அளிப்பவன் உயிர் அளப்பவன் ஆவான்.(உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.)

துறவுக் கோலத்தில் இருப்பவரும்..உணவுக்காக இல்லறத்தாரை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.துறந்தோர் என்பவர் முற்றும் துறந்தவராய் இருக்க வேண்டும்..சிலவற்றை துறக்க மறந்தவராய் இருக்கக் கூடாது.

எனவே..முழுத் துறவுதான் துறவிகளின் இலக்கணம்.தலையை மொட்டையடித்து, காஷாயம் பூண்டு, சில நூல்களை கையில் ஏந்தி, திரிதண்டம்,கமண்டலம் தாங்கி இருப்பது துறவாகாது.இத்தகைய போலித் துறவைத் துறந்து இல்லறத்தில் நாட்டம் கொள்வீர்.எவன் ஒருவன் ஆசையுள்ளவன் போல் காணப்பட்டாலும்..ஆசையற்றவனாக இருக்கின்றானோ, பகைவரிடத்தும்..நண்பரிடத்தும் சமமாக நடந்துக் கொள்கின்றானோ அவனே உண்மைத் துறவி ஆவான்.அவனே உண்மையில் முக்தி மார்க்கத்தில் செல்பவன்.இத்தகைய மன நிலையைப் பெற்று இல்லறத்திலே இருந்துக் கொண்டு ராஜரிஷி போல் வாழ்ந்து உண்மைத் துறவிகளைப் போற்றி மனத்தை வெல்வீராக' என்று ஜனகரின் மனைவி கூறினாள்.

எனவே நீங்களும் உங்களது விவேகமற்ற மன நிலையிலிருந்து விடுபட்டு உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.சான்றோரையும்..தவத்தோரையும் வழிபட்டு உலகை நன்முறையில் காப்பீராக.நற்கதி பெற இதுவே நன்னெறி ஆகும்' என்றான் அர்ச்சுனன் தருமரை நோக்கி.