Saturday, February 27, 2010

88-தருமர் பீமனுக்கு மறுமொழி

பிமனுக்கு தருமர் பதிலுரைக்கத் தொடங்கினார்..

'அரசாட்சி..அரசாட்சி என அலைகிறாயே..நன்கு சிந்தித்துப் பார்.இந்த உலகின் நிலைமையைப் புரிந்துக் கொள்..கானகத்தில் வேட்டையாடும் வேடனுக்கு வயிறு ஒன்றுதான்..இந்த பூமி முழுதும் அரசனாக இருந்து ஆட்சி புரியும் மன்னனுக்கும் வயிறு ஒன்று தான்.காதல்,அன்பு,சினம் போன்ற எல்லா உணர்ச்சிகளும் அப்படியே ஒரே தன்மையாக இருக்கின்றன.ஒரு நாளென்ன..ஒரு மாதம் என்ன..ஆயுள் முழுதும் முயன்றாலும் மனித ஆசை நிறைவேறாது.மகிழ்ச்சியையும்..செல்வத்தையுமே நீ பெரிதாக எண்ணுகிறாய்..போரிட்டுப் பெற்ற அரச பாரத்தைச் சுமக்க வேண்டும் என்னும் பேராசை உன்னிடம் உள்ளது..

இப் பெரிய சுமையை தூக்கி எறிந்து விட்டு தியாகம் என்னும் துறவை மேற்கொள்வாயாக..புலியானது தன் வயிற்றுக்காக எவ்வளவு இம்சையில் ஈடுபடுகிறது? அதுபோலவே தீயவர் பலர் இம்சையில் ஈடுபடுகின்றனர்.பொருள்கள் மீதான பற்றை விட்டுத் துறவறத்தை மேற் கொள்பவர் சிலரே..அறிவின் வேறுபாடு எப்படி உள்ளது பார்! இந்த பூமி முழுதும் எனக்கே சொந்தம்..யாருக்கும் பங்கு இல்லை என ஆட்சி செய்யும் மன்னனை விட, அனைத்தும் துறந்த துறவி மேலானவர்.

அருமைத் தம்பி..உலக இயல்பை சிந்தி..பொருள் மீது ஆசை கொள்பவன் துன்பம் அடைகிறான்.ஆசை அற்றவன் இன்பம் அடைகிறான்.ஆகவே நாடாள்வதும்..தியாகமே என்ற பொய் வாதத்தை விட்டு விட்டு இவ்வுலக வாழ்க்கையை துறப்பாயாக..எல்லாப் பற்றையும் துறந்த ஜனகர் ஒருமுறை சொல்கிறார்..'எனது செல்வம் அளவற்றது..ஆனால் எனக்கு என்று ஏதுமில்லை..ஆதலால் மிதிலை பற்றி எரிந்த போது என்னுடையது ஏதும் எரியவில்லை.பொருள் பற்று இல்லாததால் அதன் அழிவு கவலையைத் தருவதில்லை..ஞானம் என்னும் குன்றில் நிற்பவன்..துயருறும் மக்கள் கண்டு துயரடைய மாட்டான்.அறிவற்றவன் மலை மீது இருந்தாலும், பூமியில் இருந்தாலும் பொருளின் உண்மைத் தன்மையை உணர மாட்டான்.ஆசையற்ற ஞானி பரம பதத்தை அடைவான்..ஞானம் அற்றவன் அதனை அடைய முடியாது' என பீமனுக்கு தருமர் கூறினார்.

ஜனகருக்கும்..அவரது மனைவிக்கும் நடந்த உரையாடலை அர்ச்சுனன் தருமருக்கு சொல்ல எழுந்தான்.

Wednesday, February 24, 2010

87-பீமன் எழுந்து உரை செய்வான்

அர்ச்சுனனின் பேச்சைக் கேட்டதும்..உற்சாகமானான் பீமன்.அவன் தருமரை நோக்கி 'உம்மை விட அரச நீதி உணர்ந்தார் யாவரும் இலர்.உங்களிடமிருந்தே நாங்கள் அனைத்து நீதியும் கற்றோம்.ஆயினும் அவற்றை எங்களால் கடைபிடிக்க இயலவில்லை.ஆனால்..எல்லாம் உணர்ந்த நீங்கள் இப்போது ஏன் தடுமாறுகிறீர்கள்? நீங்கள் ஏன் சாதாரண மனிதரைப் போல சோகத்துடன் உள்ளீர்.

உலகில் நல்லது, கெட்டது அனைத்தும் நீர் அறிவீர்.எதிர்காலம் பற்றியும் உமக்குத் தெரியும்.ஆதலால் நான் சொல்வதை சற்றுக் கேளும்..உலகில் உடலைப் பற்றியும்..மனதுப் பற்றியும் இரு வகை நோய்கள் உள்ளன..இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகிறது.உடல் நோயால்..மன நோயும்..மன நோயால் உடல் நோயும் உண்டாகின்றன.உடல்,மனம் இந்த நோய்களைக் குறித்து எவன் சோகம் அடைகின்றானோ.அவன் அந்த சோகத்தால்..துக்கத்தையும் அடைகிறான்.இந்தச் சோகமும் துக்கமும் அவனை ஆட்டிப் படைக்கின்றன.

மகிழ்ச்சியில் இருக்கும் மனிதர்கள்..தங்கள் அறியாமையால்..துக்கத்தை தாங்களாகவே வரவழித்துக் கொள்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் போலவே..நீங்கள் இப்போது நடக்கிறீர்கள்.மிகவும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய நேரத்தில் துக்கத்தை அடைந்துள்ளீர்.நாம் கடந்து வந்த பாதையை சற்று எண்ணிப் பாரும்.நம் கண்ணெதிரிலேயே, வீட்டு விலக்காக ஒற்றை ஆடையில் இருந்த திரௌபதியை அவையில் இழுத்து வந்தானே கொடியவன்..அந்தக் கொடுமையை எப்படி மறந்தீர்? நாட்டைவிட்டுச் சென்று காட்டில் நாம் அடைந்த வேதனையை மறந்து விட்டீரா..அஞ்ஞாத வாசத்தில் திரௌபதியை கீசகன் காலால் உதைத்தானே..அந்தத் துயரக் காட்சியை எப்படி மறந்தீர்?

பீஷ்மர்,துரோணர் ஆகிய புறப் பகையை வெற்றிக் கொண்ட நீர் அகப் பகையை வெல்ல முடியாது தவிப்பது ஏன்?இந்த மனப் போராட்டத்தில் வில்லும்,அம்பும் வாளும் உறவினரும் நண்பரும் ஒன்றும் செய்வதற்கில்லை.இம்மனத்தை அடக்கும் முயற்சியில் நீரே தான் ஈடுபட வேண்டும்.தெளிவற்ற குழம்பிய நிலையில் உள்ள மனம் ஒரு நிலையில் நிற்காது.உமது மனப் போராட்டம் வீணானது.நீர் ஈனக்கவலையை விட்டொழித்து ..நீதி நெறி வழுவாமல் அரச பாரத்தை ஏற்பீராக! தெய்வ பலத்தாலும்..திரௌபதியின் அதிர்ஷ்டத்தாலும் துரியோதனன் இனத்தோடு அழிந்தான்.இனியும் சிந்திக்க என்ன உள்ளது? விதிப்படி அஸ்வமேத யாகம் செய்வீர்.நாங்களும், கண்ணபிரானும் இருக்கும் வரை உமக்கு என்ன குறை? ' என்றான்.

Monday, February 15, 2010

86-அர்ச்சுனன் மீண்டும் தருமருக்கு உரைத்தல்

அண்ணலே! தீயோரை அடக்கி மக்களைக் காப்பது அரச நீதியாகும்.மன்னன் உறங்கினாலும் அரச நீதி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும்.அறம், பொருள்,இன்பம் ஆகியவற்றைக் காப்பது அரசநீதி யாகும்.மக்களில் சிலர் மன்னன் தண்டிப்பான் என்றே தவறு செய்யாமல் இருக்கிறார்கள்.சிலர் மரண தண்டனைக்குப் பயந்தும், செத்த பிறகு நரகம் போக வேண்டியிருக்கும் எனப் பயந்தும் குற்றம் புரியாமல் இருக்கின்றனர்.அரச தண்டனை என்பது செங்கோலின் ஒரு பகுதி என்பதை மறக்கக் கூடாது.தண்டனைக்குப் பயந்துதான் ஒருவரை ஒருவர் துன்புறுத்தாது உள்ளனர்.குற்றத்திற்கு சரியான தண்டனை வழங்காவிடின்..உலகம் காரிருளில் மூழ்கிவிடும்.அடங்காமல் இருப்பவரை அடக்குவதும்..தவறு செய்பவரைத் தண்டிப்பதும் நீதியாகும்.கொடியவர்களைக் கொல்லத் துணியாத வேந்தனுக்கு புகழும் இல்லை..செல்வமும் இல்லை.

விருத்தன் என்னும் அசுரனைக் கொன்றுதான் இந்திரன் மகேந்திரன் ஆனான்.பிற உயிரைக் கொல்லாமல் எந்த பிராணியும் உயிரோடு இருப்பதில்லை.கீரி எலியைக் கொன்று தின்கிறது.கீரியைப் பூனைக் கொல்கிறது..பூனையை நாய் கொல்கிறது, நாயைப் புலி கொல்கிறது.புலிகளையும் பிறவற்றையும் மனிதன் கொல்கிறான்.இப்படி ஒவ்வொரு உயிரும் பிற உயிரின் உணவாகின்றது.

உயிரினங்களின் படைப்பின் ரகசியத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.எல்லா உயிர்களும் ஒவ்வொரு தன்மையுடன் படைக்கப் பட்டுள்ளன.நான்குவகை வருணத்தவரின் வாழ்வு நிலையை புரிந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியர்களின் தன்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியன் அறிவின்மையால் சினத்தையும் மகிழ்ச்சியையும் துறந்து காடு சென்று கடுந்தவம் புரிந்தாலும் காய், கிழங்குகள் இன்றி காலம் தள்ள முடியாது.நீரிலும், பூமியிலும், பழங்களிலும் பல உயிர்கள் இருக்கின்றன.நாம் கண் இமைத்தலால் உயிர் இழக்கத் தக்க நுண் உயிர்கள் காற்றில் ஏராளமாக இருக்கின்றன.உலகில் அவற்றைக் கொல்லாமல் யார் இருக்கின்றனர்.

ஆகவே உயிர்க்கொலை என்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.அரசனாக இருப்பவன் சில கொலைகளைச் செய்தே ஆக வேண்டும்.இல்லையெனில் பகைவர்களை அடக்க முடியாது.அது மட்டுமின்றி, சரியான தண்டனை இல்லையெனில்..யாரும் கல்வி கற்க மாட்டார்கள்.வண்டியில் கட்டிய மாடுகள் கூட தண்டனை இல்லாவிடின் வண்டியை இழுக்காது.பகைவரை அழிக்கும் திறன் உள்ள நாட்டில்தான் பொய்யும்,திருட்டும்,வஞ்சனையும் இருக்க வழியில்லை.ஆகவே..ஐயோ..கொலை நேர்ந்து விட்டதே என புலம்புவதில் பயன் இல்லை.பசுக்கூட்டத்தைக் கொல்லவரும் புலியை கொல்வது பாவம் என்றால் பசுக்களைக் காப்பாற்ற முடியாது.இங்கு புலியைக் கொல்லுதல் நியாயம் ஆகிறது..அதுவே தருமம்.கொல்லத் தகாத உயிர்களைத்தான் கொல்லக் கூடாது.கொல்லத் தகுந்ததைக் கொன்றே தீர வேண்டும்.அதுபோல அழிக்க வரும் அரசனை அழிப்பது அரச நீதி ஆகும்.எனவே இந்தப் பகைவரின் அழிவு குறித்துச் சோகப்பட வேண்டாம்.தரும நீதி இதுவென உணர்ந்து அரசாட்சி மேற்கொள்ளுங்கள்' என்று தருமரிடம் கூறிவிட்டு அமர்ந்தான் அர்ச்சுனன்.

Monday, February 8, 2010

85- சகாதேவன், திரௌபதி தருமரிடம் உரையாடுதல்

நகுலனின் பேச்சுத் துறவறத்தில் உள்ள துன்பத்தை விவரிக்கவும், அரசரின் கடமையை நினைவுபடுத்துவதாகவும் அமைய சகாதேவன் தருமரைப் பார்த்து'எனக்குத் தாயும், தந்தையும், குருவும் நீங்கள்தான்.உம் மீது உள்ள பக்தியால் இதை உரைக்கிறேன்.தவறாயின் மன்னிக்கவும்.உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரையோ நண்பர்களையோ, வீடு முதலானவற்றையோ துறப்பது துறவு ஆகாது.இவை எல்லாம் புறப் பொருள்கள்.புறத்துறவு உண்மைத் துறவன்று.உள்ளத்தில் தோன்றும் அழுக்காறு அவா வெகுளி காமம் முதலிய தீய நினைவுகலைத் துறப்பதுதான் உண்மைத் துறவாகும்.இதனை அகத்துறவு என்பர்.

காலமெல்லாம் க்ஷத்திரிய சிந்தனையுடன் வாழ்ந்த உமக்கு எப்படி இந்த துறவு எண்ணம் வந்தது.துறவு என்பது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தோன்ற வேண்டும்.துக்கத்தில் தோன்றுவது துறவாகாது.சாது தருமத்தில் சிறிது தவறு நேரினும்..அடுத்த பிறவி பெரும் துன்பம் தரும் பிறவியாகி விடும்.அப்பிறவியிலிருந்து அடுத்தடுத்து நேரும் பிறவிகள் எப்படி யிருக்கும் என யாரால் சொல்ல முடியும்.ஆகவே நம் முன்னோர்கள் செல்லும் வழியிலேயே நாமும் செல்ல வேண்டும்.மற்ற யுகங்களைக் காட்டிலும் திரேதாயுகம் மிகச் சிறந்த யுகமாகும்.அந்த யுகத்திலே தோன்றிய அரசர்கள் இந் நில உலகில் நன்கு ஆட்சி புரிந்தனர்.தீமையை ஒழித்து நன்மையை நிலை நிறுத்தினர்.இதைவிட அரச தருமம் வேறென்ன உண்டு.எனவே..நீரும் நம் முன்னோர் சென்ற வழியில் நாடாள வேண்டும்' என்றான்.

தம்பியரின் உரைகள் தருமரை மாற்றவில்லை..இந்நிலையில் திரௌபதி தருமரை நோக்கி..

உம் தம்பியர் உமது துயர் கண்டு வருந்துகின்றனர்.அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டியது உமது கடமை.முன்னர் காட்டில் வாழ்ந்த போது தாங்கள் கூறியது என்ன.'என் அருமை தம்பியரே! பொறுங்கள்..நம் துன்பங்கள் விரைவில் தீரும்.நாம் கொடியவனான துரியோதனனைக் கொன்று நாட்டை மீட்போம்.' என்று கூறினீர்கள்.எனக்கு ஆறுதல் சொன்னீர்.அப்படிப் பேசிய நீங்கள் தற்போது ஏன் எங்கள் அனைவருக்கும் துன்பம் தரும் சொற்களைக் கூறுகிறீர்.

தைரியம் இல்லாதவரால் நாட்டை ஆள முடியாது.நீதி தெரியா அரசர் புகழ் பெற முடியாது.அவரது நாட்டு குடி மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.நல்ல அரசன் உலகில் சூரிய சந்திரர்களின் ஆற்றலைப் பெற்றவன்.நெருப்பு நெருங்கிய பொருளைத்தான் சுடும்.ஆனால் அரச தண்டனையோ தீமை எங்கிருந்தாலும் அழித்துவிடும்.உமது சினத் தீ திருதிராட்டிரனின் குலத்தையே சுட்டெரித்து விட்டது.

உலகம் தூங்குகையில் அரச நீதி விழித்துக் கொண்டிருக்கும்.அப்படி நீதி செலுத்தும் அரசனைத் தேவரும் போற்றுவர்.அரசன் தண்டிப்பான் என்பதாலேயே தீமை செய்வோர் அடங்கியுள்ளனர்.அரசரிடத்தில் அச்சம் இல்லையெனில் அனைத்து நாட்டு நன்மைகளும் சிதறிப் போகும்.குற்றம் செய்பவர் தப்பிக்க முடியாது என்ற அச்சம் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.இந்த உணர்வு அல்லாதார் தண்டிக்கப் படுவர்.

தருமத்தை விட்டு விலகியதால் தான் திருதிராட்டினனின் புதல்வர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் நீர் வருந்த வேண்டாம்.தீயவர்களை தண்டிப்பதும்..நல்லவர்களைக் காப்பதும் ,போர்க்களத்திலிருந்து ஓடாமல் இருப்பதும் முக்கிய தருமங்கள் ஆகும்.இந்நாட்டை ஆளும் உரிமையை யாரிடமும் யாசித்துப் பெறவில்லை.

குந்திதேவியார் அன்று சொன்னது என்ன 'திரௌபதி உனக்கும் நல்ல காலம் வரும்.என் மகன் தருமன் உன் துயரைத் தீர்க்கப் போகிறான்.' என்றாரே..அது பொய் ஆகுமா?உலகில் உள்ள பெண்கள் அனைவரினும் நான் கீழானவள்.திருதிராட்டிரனனின் மகன்களால் அடைந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கின்றேனே..இதைவிடக் கீழ்மை என்ன இருக்கப் போகிறது.அந்த மா பாவிகளை கொன்றதில் என்ன தவறு.

தற்கொலை செய்து கொள்பவன்,தன் பொருளை அழிப்பவன்.உறவினனைக் கொல்பவன்,விஷம் வைப்பவன்,காரணமின்றி பிறரைக் கொல்பவன்,பிறன் மனைவியை இழுப்பவன் ஆகிய இந்த அறுவரும் ஆததாயிகள் எனப்படுவர்.இவர்களைக் கொல்வது கொலைக் குற்றமாகாது..என்று பிரம தேவர் பார்க்கவரிடம் சொன்னதை மறந்து விட்டீரா? அரசவையில் என்னை இழுத்து வந்து மானபங்கம் செய்த பாவிகளைக் கொன்றது குற்றமல்ல.அதற்கான தண்ட நீதியை செலுத்திய நீர் கோழைகளைப் போல் நடந்துக் கொள்ளக் கூடாது.கவலையை விட்டொழித்துத் தம்பியருடன் நல்லாட்சி செய்வீராக.." என்று அரச நீதியை நினைவுப் படுத்தினாள்.