Sunday, January 24, 2010

84-நகுலனின் பேச்சு

அர்ச்சுனனின் பேச்சைத் தொடர்ந்து நகுலன் தருமரிடம் கூறலானான்

"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.

அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூவகைப் பயனும் உண்டு.

ஆகவே..அரசே..இந்திரனுக்கு இணையான நீர் ராஜசூயம்,அசுவமேதம் முதலான யாகங்களைச் செய்வீராக.நாடெங்கும் திருடர்களால் துன்பம் அடையும் மக்களைக் காக்காத வேந்தன் சனியின் வடிவம் என பழிக்கப்படுவான்.நாட்டாட்சியை நல்ல முறையில் செயல்படுத்தாத நாம் துன்பத்தைத்தான் அடைவோமே தவிர ஒரு போதும் இன்பம் அடைய மாட்டோம்.

எனவே..கிடைத்த வாய்ப்பை விட்டு துறவை மேற்கொள்வீராயின் இம்மை மறுமை ஆகிய இருமையும் இழந்து மேலும் துன்பம் அடைய நேரிடும்.போர்க்களத்தை நாம் வலிமையினால் வென்றோம்..இனி நல்லாட்சி தருவது நம் கடமை ஆகும்.ஆகவே..அரச தருமப்படி நாட்டை ஆண்டு மேலான பதத்தை அடைய வேண்டிய நீர் இப்படிச் சோகத்தில் மூழ்குவது நன்றன்று'

இவ்வாறு நகுலன் தன் கருத்தைக் கூற..அவனைத் தொடர்ந்து சகாதேவன் கூறலானான்.

Wednesday, January 6, 2010

83-பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்

பீமன் தருமரைப் பார்த்து 'நீங்கள் உண்மையை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை..ராஜ தர்மத்தையே கொச்சைப் படுத்துகிறீர்.ராஜ தருமத்தில் உங்களுக்கு ஏன் அருவெறுப்பு? இப்படி நீங்கள் சொல்வீர்கள் எனத் தெரிந்திருந்தால்..நாங்கள் போர்க்கருவிகளையே எடுத்திருக்க மாட்டோம்.யாரையும் கொன்றிருக்கமாட்டோம்.இந்தப் போரே நடந்திராது.காலமெல்லாம் நாம் பிச்சை எடுத்திருப்போம்.இவ்வுலகு வலிமையுள்ளவர்களுக்கே சொந்தம் என மேலோர் கூறியுள்ளனர்.நம்ம பகைவர்களைத் த்ரும நெறிப்படி கொன்றோம்.வெற்றி பெறற நாட்டை அனுபவித்தல்தான் முறை.

பெரிய மரத்தில் ஏறி அரும்பாடுப்பட்டு கொணர்ந்த தேனைப் பருகாது..மரணம் அடைவது போல இருக்கிறது உமது செயல்.பகைவனைக் கொன்றுவிட்டு..தற்கொலை செய்துக் கொல்வது போல இருக்கிரது உங்க செயல்.உம்மைச் சொல்லிக் குற்றமில்லை.மந்த புத்தியுள்ள உங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள்தான் நிந்திக்கத் தக்கவர்கள்.ஆற்றல் மிக்கவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் சீரிய சிந்தனை மிக்கவர்களான நாங்கள் ஆற்றல் அற்றவர்களைப் போல ஆண்மை அற்ற உம்முடைய சொற்களுக்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.துறவு என்பது முதுமைக் காலத்தில் நிகழ்வது..க்ஷத்திரியர்கள் துறவு மேற் கொள்வதை மேலோர் விரும்புவதில்லை.போர்க்களமே அவர்கள் மோட்ச உலகம்.

உண்மை இவ்வாறு இருக்க உமது செயல் க்ஷத்திரிய தருமத்தை நிந்திப்பது போல இருக்கிறது.பொருளற்றவர்களே துறவறத்தை நாடுவர்.துறவு மேற்கொள்பவர்கள் மேலும் பிறர் துன்பத்தை சுமப்பதில்லை தமது சுற்றம்,விருந்தினர்,ரிஷிகள் இவர்களைக் கவனிக்காமல் காடுகளில் திரிந்து சுவர்க்கம் அடைய முடியுமானால் ..காட்டிலேயே பிறந்து..காட்டிலேயே வளர்ந்த விலங்குகள் ஏன் சுவர்க்கம் அடையவில்லை.இரண்டுவேளை நீராடினால் முக்தி கிடைக்குமெனில்..எந்நேரமும் நீரில் கிடக்கும் மீன்கள் ஏன் முக்தியை அடையவில்லை?ஒரு பொருளிலும் பற்றற்று அசையாது நிறபதன் மூலம் முக்தி அடையலாம் என்றால் உயர்ந்த மலைகளும்..ஓங்கி வளர்ந்த மரங்களும் ஏன் முக்தி அடையவில்லை?ஒவ்வொருவரும் தன் கடமைகளை செய்ய வேண்டும்.தம் கடமையை மறந்தவனுக்கு முக்தி கிடைக்காது' என்றான்.

பின் மீண்டும் அர்ச்சுனன் தருமரைப் பார்த்து..'துறவறம் சிறந்ததா..இல்லறம் சிறந்ததா என்பதை அறிந்து கொள்ள முன்பு ஒரு புறாவிற்கும்,துறவிகளுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சான்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.நல்ல குலத்தில் பிறந்த சிலர் துறவு வாழ்க்கை மேலானது எனக் கருதித் தாய் தந்தையரையும்,சுற்றத்தாரையும்,பிறந்த வீட்டையையும்,உடமைகளையும் துறந்து காடு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.அவர்களிடம் கருணை கொண்ட இந்திரன் ஒரு புறா உருவில் வந்தான்.விகசத்தை (ஹோமம் செய்து பிறருக்குக் கொடுத்தபின் மீதியிருக்கும் உணவு)உண்பவர்களே முக்தியடைவர் என்றது புறா.ஆனால் அந்த துறவிகள் விகசம் என்றால் காய்கறிகள் என தவறாகப் புரிந்து கொண்டனர்.

துறவிகளும்..தாங்கள் சரியான பாதையில் செல்வதாக மகிழ்ந்து 'பறவையே! உன் பாராட்டுக்கு நன்றி' என்றனர்.

உடன் புறா 'உங்களை நான் புகழவில்லை.நீங்கள் மூடர்கள்..நீங்கள் தெளிவு பெறச் சிலவற்றைக் கூறுகிறேன்.நாற்கால் பிராணிகளுள் சிறந்தது பசு..உலோகங்களில் தங்கம் சிறந்தது.ஒலிகளுள் வேதம் சிறந்தது..இரண்டுகால் பிராணிகளுள் வேதத்தை அறிந்தவன் சிறந்தவன்.ஒவ்வொருவனுக்கும் பிறப்பு முதல் இறப்புவரை பருவத்திற்கேற்பப் பல கருமங்கள் உள்ளன.தனக்குரிய கருமத்தைச் செய்பவன் புண்ணியப் பேறு பெறுவான்.குடும்பத்தில் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள்,விருந்தினர் ஆகியோரைக் கவனிக்க வேண்டும்.அவர்கள் உண்ட பின் எஞ்சிய உணவை உண்ன வேண்டும்.இந்த இல்லறக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிய பின்னரே தவம் பற்றிய எண்ணம் வர வேண்டும்.அதன்பின் தேவகதி முதலான கதிகளைப் படிப்படியாகக் கடந்து இறுதியில் பிரம பதவி அடைய முடியும்.எனவே அறவோர் போற்றும் இல்லறக் கடமைகளை முதலில் மேற்கொள்வீராக' என்று கூறியது.

உண்மை உணர்ந்த துறவிகள் இல்லற தருமத்தை மேற்கொண்டனர்.ஆதலால் உமக்குரிய அரச தருமத்தை மேற்கொண்டு நல்லாட்சி புரிவீராக' என அர்ச்சுனன் கூறினான்.